This Article is From May 29, 2020

பிரதமர் மோடி அப்படி கூறினாரா? டிரம்ப் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் அரசு வட்டாரங்கள்!

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை வெடித்துள்ள நிலையில், அதனை நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து தீர்த்து வைக்க உதவுவோம் என நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி அப்படி கூறினாரா? டிரம்ப் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் அரசு வட்டாரங்கள்!

பிரதமர் மோடி அப்படி கூறினாரா? டிரம்ப் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் அரசு வட்டாரங்கள்!

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாகவும், சீனாவுடனான எல்லை பிரச்சினையில் அவர் "நல்ல மனநிலையில்" இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இருநாட்டு தலைவர்களுக்கிடையே சமீபத்தில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு உயர் வட்டாரங்கள் கூறும்போது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே சமீபத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுக்கு இடையேயான கடைசி உரையாடல் என்பது ஏப்ரல் 4ம் தேதியன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பாகவே இருந்தது, என்று தெரிவித்துள்ளன.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை வெடித்துள்ள நிலையில், அதனை நடுவராகவோ அல்லது தூதராகவோ இருந்து தீர்த்து வைக்க உதவுவோம் என நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், சீனாவுடனான எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு மத்திய அரசு பதில் அளித்தது. 

இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சினையில் நாங்கள் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அவர் தற்போது "நல்ல மனநிலையில்" இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு பெரும் நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள். இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன. பதட்டத்தை அதிகரிப்பதும், இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவதும் என ஒரு தெளிவான சமிக்ஞையில், அவர்கள் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஏறக்குறைய 3,500 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையாகும்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் ராணுவ மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உருவானது குறித்து வார்த்தைப் போர் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளதாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்றைய தினம் பதில் அளித்திருந்தது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது,

தூதகர ரீதியில் இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதுதொடர்பாக பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். 

எல்லையில் நமது படைகள் சிறப்பாக செயல்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன. இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.