This Article is From Jan 01, 2019

‘காங்கிரஸுக்கு கொடுத்து வரும் ஆதரவு மறு பரிசீலனை!’- மாயாவதி ட்விஸ்ட்

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார்

உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கூட்டணி தொடருமா என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. 

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸுக்கு ஓர் நிபந்தனை விதித்துள்ளார் மாயாவதி
  • உ.பி-யில் காங்-பகுஜன் சமாஜ் கூட்டணி அமையுமா என்பதில் தெளிவில்லை
  • மாயாவதியுடன் தோழமையாக உள்ள அகிலேஷும், காங்., எதிராக இருக்கிறார்
New Delhi:

சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தனிப் பெரும் கட்சியாக வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ‘காங்கிரஸ் ஆட்சியமைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்' என்றார். இதனால், 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதில் எந்த வித சிக்கலும் இருக்கவில்லை. 

ஆனால், இப்போது அதற்கு சிக்கல் வந்துள்ளது. மாயாவதி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘கடந்த ஏப்ரல் மாதம் தலித்துகள் அனைத்திந்திய ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அப்போது பல அப்பாவிகள் மீது பாஜக அரசு வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குகளை காங்கிரஸ் தலைமையிலான அரச வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸிற்கு அளித்து வரும் ஆதரவு குறித்து மறு பரிசீலனை செய்வோம். இதைப் போன்ற ஒரு அழுத்தம் காங்கிரஸிற்குக் கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். ஏனென்றால், பாஜக-வைப் போல காங்கிரஸும் வாக்குறுதிகளை கொடுக்க மட்டும்தான் செய்யுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நிலையை காங்கிஸ்தான் தனது செயல்பாடுகள் மூலம் மாற்றிக் காண்பிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசு எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்குப் பாதுக்காப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டது. இதற்கு இந்திய அளவில் இருக்கும் பல்வேறு தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அறிவிப்பு, வட இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்தது. பல இடங்களில் தொடர் போராட்டங்களும் நடந்தன. அந்தப் போராட்டங்களுக்குக் காங்கிரஸ் கட்சி அப்போது ஆதரவு தெரிவித்திருந்தது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட, ‘நமது தலித் சகோதரர்கள் மோடி தலைமையிலான அரசிடம் நியாயம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாமும் ஆதரவு தருவோம்' என்று ட்விட்டர் மூலம் கூறியிருந்தார். 

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பகுஜன் சமாஜுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நீடித்து வருகிறது. 

உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கூட்டணி தொடருமா என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. 
 

.