This Article is From Nov 27, 2019

புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறாரா? என்ன சொல்கிறார் அஜித்பவார்..!

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, 7.50மணிக்கு துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவார் 80 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறாரா? என்ன சொல்கிறார் அஜித்பவார்..!

பதவியை ராஜினாமா செய்ததும் சரத்பவாரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

Mumbai:

துணை முதல்வர் பதவியை அஜித்பவார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அஜித்பவார் இடம்பெறுகிறாரா என்பது குறித்து அவர் தெளிவுப்படுத்தவில்லை. 

எனினும், தான் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரவே முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், எனது கட்சித் தரும் எந்த பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். யாருடனும் எந்த மன வருத்தமும் இல்லை என்றும் கூறினார். 

மகாராஷ்டிரா சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக இன்று காலை அவைக்கு வருகை தந்த எம்எல்ஏக்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை சுப்ரியா சுலே வரவேற்ற போது, வருகை தந்த அஜித்பவாரை அவர் கட்டித்தழுவி அன்புடன் வரவேற்றார். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன. 

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, 7.50மணிக்கு துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவார் 80 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார். 

.