This Article is From Aug 30, 2019

Toll Plaza: சுங்கச்சாவடியில் பெண் பணியாளரை கன்னத்தில் அறைந்தவர் கைது!

Toll Plaza, Gurgaon: கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண்ணை தாக்கிய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Toll Plaza: சுங்கச்சாவடியில் பெண் பணியாளரை கன்னத்தில் அறைந்தவர் கைது!

கெர்கி தௌலா சுங்கச்சாவடி குருகிராமில் இருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது.

Gurgaon:

குர்கானில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரில் சென்றவரைத் தட்டிக்கேட்ட பெண் பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குர்கான் கெர்கி தவுலா சுங்கச்சாவடிக்கு காரில் வந்த பயணி ஒருவர் சுங்க வரி செலுத்தாமல் செல்வதற்கு அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். அப்போது சுங்க வரி வசூலித்து வந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த அடையாள அட்டை செல்லாது எனவும் சுங்க வரியை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் திடீரென பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்தார். இதைத்தொடர்ந்து, சற்றும் தாமதிக்காமல் தனது கன்னத்தில் அறைந்த நபரை அந்தப் பெண்ணும் பதிலுக்கு அறைந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து சென்ற அந்த நபரை இரண்டு மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. பின்னர் இந்த விடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியது. அதில், சுங்கச் சாவடியில் உள்ள கட்டண மையத்தில் 3 ஆண்களுடன் அந்த பெண் பணியாளர் உள்ளார். 

அப்போது காரில் வரும் நபர், சிறிது நேரத்தில் காரில் இருந்து வெளியே இறங்கி சுங்கச்சாவடி கட்டண மையத்தின் ஜன்னல் வழியாக அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைகிறார். அப்போது, சற்றும் தாமதிக்காமல் அந்த பெண், அந்த நபரை திருப்பி கன்னத்தில் அறைகிறார். 

இதையடுத்து, அந்த பெண் கட்டண மையத்தைவிட்டு வெளியே வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இந்த சம்பவம் நடைபெறும் போது, அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் வேடிக்கை பார்த்த படி நிற்கின்றனர். 

இதனிடையே, சுங்கச்சாவடி பெண் பணியாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தாக்கிவிட்டு சென்ற நபர் இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். என்சிஆர் - ஜெய்ப்பூரை இணைக்கும் கெர்கி தௌலா சுங்கச்சாவடி குருகிராமில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 

.