This Article is From Oct 11, 2018

‘மீண்டும் சொல்கிறேன், பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி!’- ராகுல் காந்தி தாக்கு

டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் உள்ளறிக்கை ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது

பிரான்ஸ் நாட்டுக்கு நிர்மலா சீதாராமன் சென்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்

New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் உள்ளறிக்கை ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டியது கட்டாயம்’ என்று டசால்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக பல விதிமுறைகள் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறது.
 

uhqc8qcg

இது சம்பந்தமாக தற்போது ‘மீடியாபார்ட்’ என்கின்ற பிரஞ்சு புலனாய்வு பத்திரிகை, டசால்டு நிறுவனதின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மீடியாபார்ட் அறிக்கை, தேசிய அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ‘தற்போது வெளி வந்திருக்கும் அறிக்கையை வைத்துப் பார்த்தால், பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி என்பது தெளிவாக புரிகிறது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி. ஆனால், அவரின் நோக்கம் ஊழலுக்கு எதிராக போராடுவதாம். அவர் உங்களின் பிரதமர் அல்ல. அவர் அனில் அம்பானியின் பிரதமர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் நாட்டுக்கு நிர்மலா சீதாராமன் சென்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல். ‘ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென்று தற்போது பிரான்ஸுக்கு சென்றுள்ளார். எதற்கு இந்த அவரசம் என்று தெரியவில்லை. இந்த பயணத்தின் மூலம், டசால்டு நிறுவனத்துக்கு அவர், இந்திய அரசுக்கு ஆதராக இருக்கும்படி அழுத்தம் கொடுப்பார். டசால்டு நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் வர உள்ளது. எனவே, அவர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகத் தான் இருப்பர். ஆனால், அந்த நிறுவனத்தின் உள்ளறிக்கையைப் பாருங்கள். அதில் உண்மை வெளிப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார். 

.