Islamabad: சர்வதேச நெருக்கடிகளை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு 121 தீவிரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான்.
கடந்த மாதம் 14-ம்தேதி நடந்த புல்வாமா தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா சர்வதேச அழுத்தம் கொடுத்தது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது. அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
பாகிஸ்தானுக்கு சீனா உள்பட எந்தநாடும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக 121 தீவிரவாதிகளை கைது செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் இந்த நடவடிக்கை ஏற்கனவே தீர்மானம் செய்யப்பட்ட ஒன்றுதான் என்றும், இந்தியா உடனான பிரச்னைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.