This Article is From Apr 02, 2019

எல்லையில் நடந்த சண்டையில் 7 பாகிஸ்தான் நிலைகள் அழிப்பு! - இந்திய ராணுவம் அதிரடி!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

எல்லையில் நடந்த சண்டையில் 7 பாகிஸ்தான் நிலைகள் அழிப்பு! - இந்திய ராணுவம் அதிரடி!!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

Jammu:

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானின் 7 நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் சில வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரும், 5 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று தொடங்கிய அத்துமீறல் இன்று காலைவரை நீடித்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் மற்றும் நவ்ஷெராவின் சில பகுதிகளிலும் பாகிஸ்தான் அத்துமீறல் நடத்தியிருக்கிறது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ரக்சிகிரி மற்றும் ரவாலாகோட்டில் உள்ள 7 நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் அளித்துள்ள தகவலின்படி ராணுவத்தினர் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானின் எல்லையோர கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

.