This Article is From Jul 20, 2018

11 வயது சிறுமி பலாத்கார வழக்கு: வாட்ச்மேன் குறித்து பகீர் தகவல்!

இந்த வழக்கைப் பொறுத்தவரை 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் தான், முதல் முறையாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார்

Chennai:

சென்னையில் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மற்றும் அங்கு வேலை பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளது காவல் துறை. இந்நிலையில், இது குறித்தான வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் அடுக்குமாடி கட்டடத்தின் வாட்ச்மேன், முன்னர் வேலை செய்து வந்த மருத்துவமனையில் ஊசி போடுவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதை வைத்துதான், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்துள்ளார் எனவும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 12 பேரையும்  போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17  பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் தான், முதல் முறையாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். அவர் தான், இதில் மற்றவர்களை ஈடுபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், சிறுமியை அடுக்குமாடி கட்டடத்தின் பல்வேறு இடங்களில் வைத்து 17 பேரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அதை, வீடியோவாகவும் எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளனர். 

இதனால் பயந்த சிறுமி வெகு நாட்களுக்கு இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், சிறுமி அவரின் சகோதரியிடம் இந்த விஷயம் குறித்துக் கூற, அவர் தன் அம்மாவிடம் சொல்லியுள்ளார். பின்னர் தான், போலீஸில் புகார் அளிக்கப்பட்டு மொத்த சம்பவம் குறித்தும் வெளியே தெரியவந்தது. 
 

.