This Article is From May 12, 2020

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 8:45 மணி அளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நெஞ்சு வலிப் பிரச்னை காரணமாக அழைத்துச் செல்லப்பட்டார் மன்மோகன் சிங். 

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

மன்மோகன், இதுவரை இரண்டு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்

ஹைலைட்ஸ்

  • ஞாயிற்றுக் கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன் சிங்
  • டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்
  • ராஜ்ய சபா எம்.பி-யாக உள்ளார் மன்மோகன் சிங்
New Delhi:

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 8:45 மணி அளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நெஞ்சு வலிப் பிரச்னை காரணமாக அழைத்துச் செல்லப்பட்டார் மன்மோகன் சிங். 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இப்படி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மன்மோகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முழு ஓய்வில் இருக்க அவரை அறிவுறுத்தியுள்ளார்கள். 

ராஜஸ்தானிலிருந்து ராஜ்ய சபாவின் எம்.பி-யாக உள்ள மன்மோகன், இதுவரை இரண்டு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஒரு பைபாஸ் சிகிச்சையும், 2009 ஆம் ஆண்டு இன்னொரு பைபாஸ் சிகிச்சையையும் அவர் செய்து கொண்டார். நீரிழிவு நோயினாலும் அவதிப்பட்டு வருகிறார் மன்மோகன். 

1990 ஆம் ஆண்டுகளில், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக பெரிதும் பாராட்டப்படுபவர் பொருளாதார வல்லுநரான மன்மோகன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன். 

கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வீடியோ கான்ஃபரென்சிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களோடு கலந்துரையாடினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மன்மோகனும் பங்கேற்றார். 

கலந்துரையாடலின் போது மன்மோகன், “தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிற்குப் பின்னர் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து தெளிவாக கூற வேண்டும்,” என வலியுறுத்தினார். 


 

.