This Article is From Oct 23, 2018

‘தீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்!’- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 நீதிபதி ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.

‘தீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்!’- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட்டாசு விற்பனையை முழுவதும் தடை செய்வதை ஏற்க முடியாத என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது

New Delhi:

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும். 

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஒன்று என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் முடிவு எடுத்துள்ளோம். இணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது. மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளது.

பட்டாசு விற்பனையை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் உரிமையாகும். வளர்ச்சிக்கு சுத்தமான காற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலும் அவசியமாகும். டெல்லி, தற்போது உலகிலேயே மிக அசுத்தமான நகரமாக மாறியுள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினர் தான்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 நீதிபதி ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.

தீர்ப்பின் போது நீதிமன்றம், ‘சட்ட சாசனத்தின் 21 வது பிரிவு, வாழ்க்கைக்கான உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது. இது பொது மக்களுக்கும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் பொருந்தும். இருவரின் நலனையும் பாதுகாக்கும் நோக்கில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தது.

.