ஹைலைட்ஸ்
- மலேசிய வரலாற்றில் ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் பிரதமர் நஜீப்
- 42 மில்லியன் ரிங்கிட்ஸ் ஊழல் குற்றச்சாட்டு நஜீப் மீது சுமத்தப்பட்டுள்ளது
- இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது
Kuala Lampur, Malaysia: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசக் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று நிறுத்தப்பட்ட நஜீப், 42 மில்லியன் ரிங்கிட்ஸ் (10.4 மில்லியன் டாலர்) பணத்தை ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மூன்று வெவ்வேறு வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 60 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் மலேசியாவில் நடந்த தேர்தலில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், தற்போது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து கீடலின் ராக்யாத் என்கின்ற மலேசியாவின் ஆளுங்கட்சி, ‘எங்கள் நாட்டு வரலாற்றிலேயே ஒரு முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை இந்த நாட்டின் சட்டம் சும்மாக விடாது என்பதற்கு நஜீப்பின் கைது சிறந்த உதாரணம்’ என்று கூறியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மலேசிய அரசு, நஜீப்பை நாட்டை விட்ட வெளியேற தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில் நஜீப் மட்டுமின்றி, அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் மற்றும் மிகவும் நெருக்கமான அரசியல் சகாக்கள் ஆகியோரும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த திடுக்கிடும் விவகாரம் குறித்து நஜீப் தரப்பு, ‘எங்கள் தலைவர் நஜீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான விசாரணை நடக்கும் என்று நம்புகின்றோம். இது அல்லா மூலம் வைக்கப்பட்டுள்ள சோதனை. அவர் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் ஆதாயத்துக்காக கூறப்பட்டுள்ளன. இந்த வழக்கிலிருந்து அவர் கண்டிப்பாக விடுபடுவார்’ என்று கருத்து தெரிவித்துள்ளது.