அறிக்கைகள் விட்டதுதான் குமாரசாமியின் சாதனை என்கிறார் எட்டியூரப்பா
Bengaluru: கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 6 மாதங்களில் ஆட்சியில் இருந்ததே குமாரசாமியின் மிகப்பெரும் சாதனை என்று பாஜக தலைவர் எட்டியூரப்பா கிண்டல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் எட்டியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
6 மாதங்கள் ஆட்சியில் இருந்ததுதான் குமாரசாமியின் மிகப்பெரும் சாதனை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து குமாரசாமி ஆட்சியை பிடித்துள்ளார். மாநிலத்தில் நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். ஆனால் 6 மாதங்களாக மாநிலத்தில் வறுமையை போக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குமாரசாமி கூறி வருகிறார்.
அறிக்கைகளை விட்டதுதான் குமாரசாமியின் சாதனையாக இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.