This Article is From Jun 24, 2020

7 நாளில் கொரோனா குணமடைய மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்த ‘பதஞ்சலி’- அரசு வைக்கும் செக்!!

ஐசிஎம்ஆர்-ன் அனுமதியின்றி பதஞ்சலி செயல்பட்டதாக கூறி ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில், அதற்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. 

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்று பதஞ்சலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நேற்று அறிவித்தது
  • ராம்தேவ், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்
  • ரூ.545 ரூபாய்க்கு இந்த மருந்து விற்பனைக்கு வரும் எனவும் அறிவிப்பு
New Delhi:

யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 7 நாட்களில் குணமடைய மருந்து கண்டுபிடித்து விட்டதாக நேற்று அறிவித்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு குறித்தும், மருந்தின் விவரங்கள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொடுக்கப்படும் தகவல்கள் முறையான சோதனைக்கு உட்படுத்தப்படும் வரை கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக விளம்பரப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறும் பதஞ்சலியிடம் அரசு உத்தரவிட்டுள்ளது. 

பதஞ்சலி நிறுவனம் நேற்று, ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. இந்த கிட் மூலம், ‘நோயாளிகள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல மூளைகளிலும் விஞ்ஞானிகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து கிட்டுக்கு 545 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்று பதஞ்சலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம், “பதஞ்சலியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்தான விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மருந்து வைத்து செய்த ஆய்வு முடிவுகள், எந்தெந்த மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரம், கிளினிக்கல் டிரெயலுக்கு முறையாக பதிவு செய்யப்பட்டதா என்கிற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதுவரை இந்த விவரங்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்பட்டது குறித்தான முறையான ஆவணங்களும் கொடுக்கப்பட வேண்டும்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சாரியா பாலகிருஷ்ணா, “மத்திய அரசு ஆயுர்வேதம் பற்றி பெருமை கொள்கிறது. அது குறித்தான ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கிறது. அரசுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் இடையில் நிலவி வந்த முரண்கள் களையப்பட்டுள்ளன. அனைத்துவித தகவல்களும் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார். 

ஆனால் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலான ஐசிஎம்ஆர்-ன் அனுமதியின்றி பதஞ்சலி செயல்பட்டதாக கூறி ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில், அதற்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. 

பதஞ்சலியின் நிறுவனர் யோகா குரு ராம்தேவ், “இந்த மருந்தின் பெயர் கோரோனில் மற்றும் ஸ்வாசரி (Coronil & Swasari). நாடு முழுவதும் சுமார் 280 கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் ராம்தேவ்.

கொரோனா தடுப்பு மருந்து குறித்துப் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

“கொரோனாவுக்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்துக்காக மொத்த நாடும் உலகமும் காத்திருந்தது. இந்த நேரத்தில் பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMSம் இணைந்து ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான மருந்து குறித்து அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அனைவரும், 100 சதவீதம் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். 

NIMS பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகள் மீது மருத்துவக் கட்டுப்பாடு ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ராம்தேவ்.

இதைப் போன்று மாற்று மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பான WHO முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. ‘சில மேற்கத்திய, பாரம்பரிய மற்றும் வீட்டு மருந்துகள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை போக்கவும் உதவி செய்யும். அதே நேரத்தில் இந்த மருந்துகள் கொரோனா தொற்றை முற்றிலும் குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆகவே, இதைப் போன்ற மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்யாது. அதே நேரத்தில் கொரோனா தொற்றைப் போக்க பல மேற்கத்திய மற்றும் பாரம்பரிய மருந்துகள் சோதனையில் உள்ளன,' என்று விளக்கம் கொடுத்துள்ளது WHO.

.