This Article is From May 04, 2020

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி அதிரடி!

Coronavirus Lockdown: இதுதொடர்பாக சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், குடிமக்களுக்கான சேவையில், ஒற்றுமையுடனும், அவர்களுடன் தோளோடு தோள் நிற்கவும் இந்திய தேசிய காங்கிரஸின் தாழ்மையான பங்களிப்பாகும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி அதிரடி!

Coronavirus Lockdown: புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும்
  • மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம்
  • தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?
New Delhi:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி செல்வதற்காகும், ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், குடிமக்களுக்கான சேவையில், ஒற்றுமையுடனும், அவர்களுடன் தோளோடு தோள் நிற்கவும் இந்திய தேசிய காங்கிரஸின் தாழ்மையான பங்களிப்பாகும். 

நமது தொழிலாளர்களே நாட்டின் வளர்ச்சியின் தூதர்கள் ஆவார்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்து அதன் பொறுப்பை அங்கீகரித்த அரசு, அதற்கான போக்குவரத்து மற்றும் உணவுக்காக ரூ.100 கோடி வரை செலவழித்தது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் அளிக்கிறது. இவையெல்லாம் செய்ய முடிந்த அரசுக்கு, இது போன்ற கடும் துயரமான நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?

ஊரடங்கை அமல்படுத்துவதற்கு நான்கு மணி நேரம் முன்னதாக தான் மத்திய அரசு மக்களுக்கு அறிவித்தது. அதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் வாய்ப்பை இழந்தனர். 

1947ல் பாகம் பிரிக்கப்பட்டபோது, இந்தியா இதுபோன்ற துயர்மிகுந்த காலத்தை சந்தித்தது. தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்க விரும்பிய ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல், பணம் இல்லாமல், உணவு இல்லாமல், அவர்களது சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். 

ஆனால், இன்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை, அவர்களுக்கு இலவச போக்குவரத்தும் இல்லை. 

நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது பெரும் கவலைக்குரியது. காங்கிரஸின் கோரிக்கைகளை மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் முற்றிலும் புறக்கணித்து வருகிறது. 

அதனால், காங்கிரஸ் கட்சியானது ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, அதன்மூலம், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு திரும்பிவருகின்றனர். 

இந்நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக வேலையில்லாததால் உரிய உணவின்றி தவித்த ஏழை புலம்பெயர் தொழிலாளர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி மறுத்தது. சிறப்பு ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழக்கமாக உள்ள கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

.