This Article is From Aug 03, 2020

ஜிம் மற்றும் யோகா நிலையங்களை திறக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜிம் மற்றும் யோகா நிலையங்களை திறக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

ஆகஸ்ட் 5 முதல் ஜிம் மற்றும் யோகா நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • வளாகத்தில் எல்லா நேரங்களிலும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்
  • ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • நான்கு மீட்டர் தனிநபர் இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், அன்லாக் 3 நடைமுறையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

சுவாச நீர்த்துளிகள் வழியாகவும் கொரோனா தொற்று பரவும் என்பதால் யோகா மையங்கள் மற்றும் ஜிம்களில் உள்ள ஊழியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான உடல் ரீதியான இடைவெளியை அதிகரிக்க இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தியுள்ளன.

இருப்பினும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள ஜிம்கள் மற்றும் யோகா மையங்கள் திறக்கப்படாது. அதே போல ஸ்பாக்கள், நீராவி குளியல் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்

  • 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள் அரங்குகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • வளாகத்தில் எல்லா நேரங்களிலும் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • அதே போல ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ஜிம் மற்றும் யோக மையங்களில் நான்கு மீட்டர் தனிநபர் இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பயன்படுத்தும் உபகரணங்கள் 6 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட வேண்டும்.
  • நெரிசலை தவிர்க்க வளாகத்திற்குள் நுழையும் வாயிலையும் வெளியேறும் வாயிலையும் சரியாக அடையாளப்படுத்த வேண்டும்.
  • குளிர்சாதன வசதியுடன் இருக்கும் வளாகங்களில் வெப்பநிலையை 24-30 செல்சியஸ் என்கிற அளவில் வைத்திருக்க வேண்டும்.
  • சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி வளாகத்தின் வாயில் பகுதியில் உள்ள கதவுகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலைமாணி கொண்டு பரிசோதிக்கப்பட வேண்டும். அறிகுறியற்றவர்களை மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஒரு நபர் நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அந்த நபர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையிலோ அல்லது பகுதியிலோ வைக்கப்பட வேண்டும். ஊழியர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் அல்லது மாநில அல்லது மாவட்ட ஹெல்ப்லைனை அழைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
.