This Article is From Sep 05, 2019

பொருளாதார மந்தநிலை குறித்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தானது: பிரியங்கா காந்தி

அரசிடம் தீர்வு காண்பதற்கு வழியும் இல்லை, மக்களிடம் வாக்குறுதி அளிப்பதற்கு வலிமையும் இல்லை’ என பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை குறித்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தானது: பிரியங்கா காந்தி

பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய அரசை பிரியங்கா காந்தி கடுமையாளக விமர்சித்துள்ளார்.

New Delhi:

பொருளாதார மந்தநிலை குறித்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்து, இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கிறது. பல்வேறு துறைகளில் பொருளாதார மந்த நிலை காரணமாக பிஸ்கட் முதல் கார் வரையிலான பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக ஆட்டோ மொபைல் துறை கடும் பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் பேர் அதில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். 

மந்த நிலையை சரி செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது. 

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதவில் கூறியதாவது, கவுண்ட் டவுன்: நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து அன்றாடம் செய்திகள் வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. 

மன்னிப்பு கேட்பதும், வார்த்தைகளால் சமாளிப்பதும், வதந்திகளும் எதற்கும் பயனளிக்காது. மத்தியில் ஆளும் அரசுக்கு பொருளாதார மந்தநிலைக்கு தீர்வு காண்பதற்கு வழியும் இல்லை, மக்களிடம் வாக்குறுதி அளிப்பதற்கு  வலிமையும் இல்லை என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரியங்கா தனது ட்வீட்டர் பதிவில், 'நூறு முறை பொய் சொன்னாலும் பொய் உண்மையாகாது. வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.' என்று கூறியிருந்தார்.

.