This Article is From Jul 12, 2018

என்னவாகும் ஐஜத - பாஜக கூட்டணி..?- பிகாரில் அமித் ஷா

பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அதை சரி செய்யும் நோக்கில் பிகாருக்கு பயணப்பட்டுள்ளார் அமித் ஷா

என்னவாகும் ஐஜத - பாஜக கூட்டணி..?- பிகாரில் அமித் ஷா
Patna:

பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அதை சரி செய்யும் நோக்கில் பிகாருக்கு பயணப்பட்டுள்ளார் அமித் ஷா.

பிகாருக்கு சென்றுள்ள பாஜக தலைவர் அமித் ஷா, இன்று காலை மாநில முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்துள்ளார். இன்று இரவும் அவருடன் அமித்ஷா கலந்துரையாட உள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் ஐஜத-வின் முக்கியப் புள்ளிகள் சந்தித்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நாங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகவோ, உதவியாகவோ அல்லது எதிராகவோ இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட முடியும். எங்கள் கட்சியின் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்’ என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பில், ‘நம்மை ஒதுக்க நினைப்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்’ என்று நிதிஷ் குமார் கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிகாரைப் பொறுத்தவரை நிதிஷ் குமார், மாநிலத்துக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து மற்றும் அமைச்சரவையில் பதவி ஆகியவையை எதிர்பார்த்துள்ளார். ஆனால், இரண்டிலும் பாஜக இதுவரை குறிப்பிடத்தக்க முடிவை எடுக்காததால், நிதிஷ் கொதிப்பில் இருப்பதாக தெரிகிறது. இந்த அதிருப்தி குறித்து பாஜக-வுக்கும் ஐஜத கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் சரி செய்து கூட்டணிக்குள் நிலவி வரும் விரிசலை சரி செய்யும் நோக்கில் பிகாரில் இருக்கும் அமித்ஷா, பாஜக மாநில நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். இந்தச் சந்திப்பின் போது, பிகாரில் பாஜக-வின் நிலை மற்றும் கள எதார்த்தம் உள்ளிட்டவற்றை குறித்து அமித்ஷா கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இரவு நிதிஷ் குமாரை சந்தித்து 2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தொகுதி பங்கீடு குறித்து கலந்துரையாடுவார் என்று தெரிகறது.

பிகார் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங், ‘இரு கட்சிக்கும் இடையில் எந்த வித பிளவும் இல்லை. இருப்பினும், பிகாரில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் கூட, மொத்தம் இருக்கும் 40 லோக்சபா சீட்களில் 75 சதவிகித இடங்களை கைப்பற்றும்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

.