This Article is From Aug 14, 2020

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக்கி விட்டால், அதன்பின்னர் இந்தியைத் திணிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதே இதற்கு காரணமாகும். இது மொழியுரிமை மறுப்பு ஆகும். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வரைவு அறிவிக்கையை மாநில மொழிகளில் வெளியிடாததற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கைகள் அனைத்தையும் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிடும் வகையில், இந்திய அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் செய்யும்படி பரிந்துரைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது ஆகும்.

ஒரு நாட்டின் அரசு வெளியிடும் அறிவிப்பு அந்த நாட்டில் வாழும் அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தான் அந்த நாட்டின் மொழிக் கொள்கையும் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதற்கு எதிரான நிலையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக்கி விட்டால், அதன்பின்னர் இந்தியைத் திணிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதே இதற்கு காரணமாகும். இது மொழியுரிமை மறுப்பு ஆகும். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டால் மட்டும் தான் மத்திய அரசின் அனைத்து தகவல்களையும் மக்களால் நேரடியாக புரிந்துகொள்ள முடியும். அப்போது தான் மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்தி பேசாத மக்கள் தங்களுக்குரிய நியாயமான இடத்தையும், பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும்.

அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. ஆனால், தொலைத்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து விட்ட நிலையில் இப்போது எந்த சிக்கலும் இல்லை. உதாரணமாக தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டால் மத்திய அரசின் அனைத்து ஆணைகளும், அறிவிப்புகளும் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும்.

இவற்றை மொழிபெயர்ப்பதில் இப்போது எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. சென்னையில் உள்ள மத்திய அரசின் ஊடக அலுவலகங்கள் மூலமாகவே இவற்றை சிறப்பாக மொழிபெயர்க்கலாம். இதேபோல் மற்ற மாநில மொழிகளிலும் எளிதாக மொழிமாற்ற இயலும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையையும், இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கு வசதியாக அலுவல் மொழிச் சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

.