This Article is From Sep 26, 2018

ஆதாருக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Aadhaar Case Verdict: ஆதார் கார்டு விளிம்புநிலை மக்களை உயர்த்துவதிலும் அவர்களுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது, உச்ச நீதிமன்றம்

ஆதாருக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Aadhaar Verdict: 100 கோடி இந்தியர்களிடம் ஆதார் கார்டு உள்ளது

New Delhi:

Aadhar Verdict: ஆதாருக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளதா என்பது குறித்தும், நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமா என்பது தொடர்பாகவும் 27 மனுதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மே மாதத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு வழக்கு விசாரணை நடந்துள்ளது.

இது குறித்தான வழக்கின் தீர்ப்பில், ‘ஆதார் கார்டு (Aadhaar Card) விளிம்புநிலை மக்களை உயர்த்துவதிலும் அவர்களுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது. எனவே ஆதார் கார்டுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த வழக்கானது மொத்தம் 38 நாட்களுக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களாக விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆதார் வழக்கு இரண்டாம் இடத்தில் உள்ளது. முன்னதாக 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்குதான் மிக நீண்ட நாட்களுக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை வரைமுறையின்றி திருத்த நாடாளுமன்றத்திற்கு அனுமதி உண்டா என்பது தொடர்பாக இந்த வழக்கு நடந்தது.

ஆதார் வழக்கை (Aadhaar Case) பொறுத்தவரையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கினால் அது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அந்தரங்க உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்று கூறி 27 மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

நலத்திட்டங்களை வழங்கும்போது முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆதாரை கட்டாயமாக்கியுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விளிம்புநிலை சமூகத்துக்கு ஆதார் பெறும் அளவில் பயன் அளிப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், அதனால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் குறைவு தான். அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பெற முடியாது’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

.