This Article is From Dec 27, 2018

எதிர்ப்புக்கு மத்தியில் லோக்சபாவில் முத்தலாக் மசோதா: முக்கிய 10 தகவல்கள்!

முத்தலாக்கை குற்றமாக்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு முத்தலாக்கை குற்றமாக்கும் அவசரச் சட்டத்தை அமல் செய்தது.

New Delhi:

முத்தலாக்கை குற்றமாக்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முத்தலாக் குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்வது என்பது சட்ட விரோதமாகும்' என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு, இந்த மசோதாவை கொண்டு வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஜனவரி மாதம் முத்தலாக் குறித்த ஒரு மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதற்கு ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் எதிப்பு தெரிவித்ததை அடுத்து, திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

முக்கிய 10 தகவல்கள்:

1. இந்தச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணத் தொகையும் அளிக்கப்படும். 

2. திருத்தப்பட்ட முத்தலாக் மசோதாவை, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார். பாஜக, தனது எம்.பி-க்கள் அனைவரையும் லோக்சபாவுக்கு வரச் சொல்லி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

3. பல எதிர்கட்சிகள், முத்தலாக்கை குற்றமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

4. சிறைத் தண்டனை விதிப்புக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதும், அதற்கு மத்திய அரசு செவி மடுக்கவில்லை. அதே நேரத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவில் 3 திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. 

5. திருத்தப்பட்ட மசோதாவில், பாதிக்கப்பட்டப் பெண்ணோ அல்லது அவருக்கு மிகவும் நெருக்கமான உறவினரோ மட்டும்தான், சம்பந்தப்பட்ட ஆணுக்கு எதிராக புகார் கொடுக்க முடியும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டால் புகாரை திரும்பப் பெறவும் முடியும்.

6. கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு முத்தலாக்கை குற்றமாக்கும் அவசரச் சட்டத்தை அமல் செய்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.

7. முத்தலாக் குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ‘முத்தலாக் சட்ட சாசனத்துக்கு எதிரான நடைமுறை. அது மதத்துக்கு சம்பந்தப்பட்டதாக பார்க்க முடியாது' என்று கூறியது.

8. முத்தலாக் புகார் தொடர்பாக ஒரு ஆண் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சம்பந்தப்பட்ட பெண் சம்மதம் தெரிவித்தால் மட்டும் தான் பிணை கொடுக்க முடியும் என்று புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது.

9. டிசம்பர் 11 ஆம் தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பமானது. அப்போதிலிருந்து இதுவரை ஒரு அமர்வு கூட எதிர்கட்சிகளின் அமளியால் நடைபெறவில்லை.

10. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘முத்தலாக் தொடர்பான மசோதாவுக்கான ஒப்புதல் சுமுகமாக இருக்கும் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

.