This Article is From Oct 14, 2019

'ஒரேநாளில் 3 படங்களுக்கு ரூ. 120 கோடி வசூல்;பொருளாதாரம் நல்லாதாங்க இருக்கு'-மத்திய அமைச்சர்

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில் திரைப்படங்கள் வசூல் அள்ளுவதை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

'ஒரேநாளில் 3 படங்களுக்கு ரூ. 120 கோடி வசூல்;பொருளாதாரம் நல்லாதாங்க இருக்கு'-மத்திய அமைச்சர்

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

New Delhi:

'ஒரே நாளில் 3 படங்கள் ரூ. 120 கோடி அளவுக்கு வசூலிக்கின்றன. பொருளாதாரம் மந்தமாக இருந்தால் இந்த வசூல் எப்படி சாத்தியமாகும்' என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காணப்படுவதாகவும், இந்தியாவிலும் பிரேசிலிலும் அது அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவை பொருத்தளவில் உட்கட்டமைப்பு துறைகள், ஆட்டோ மொபைல் உள்ளிட்டவை பின்னடைவை சந்தித்து வருகின்றன. செப்டம்பரில் மட்டும் கார்களின் விற்பனை 23.7 சதவீதமாக சரிந்துள்ளது. தொடர்ந்து 8-வது மாதமாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது - 

அக்டோபர் 2-ம்தேதி விடுமுறை தினமாக இருந்தது. அன்றைக்கு 3 இந்தி திரைப்படங்கள் ரூ. 120 கோடி அளவுக்கு வசூல் செய்தது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக இல்லாவிட்டால் இந்த வசூல் சாத்தியம் ஆகுமா? 

எலக்ட்ரானிக் சாமான்கள் உற்பத்தி துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் சிறப்பாக இயங்குகின்றன.  அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்ற நாங்கள் ஒருபோதும் சொன்னது கிடையாது. அரசுக்கு எதிரான சில அமைப்புகள் மக்களை தவறாக வழி நடத்துகின்றன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்தில் இருக்கிறோம். நாம் பிரான்சையே பின்னுக்கு தள்ளியுள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.