இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
New Delhi: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை வழங்க இந்திய ரயில்வே ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. இதுபற்றி விவரத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ரயில்வேயின் முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த ரோபோவை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 3 பேருக்கு உணவு அல்லது மருந்துப் பொருட்களை வழங்க முடியும். இதன்மூலம் கொரோனா பாதித்தோருடன் நேரடி தொடர்பு மற்றவர்களுக்கு ஏற்படுவதை தடுக்கலாம்.
இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக இந்திய ரயில்வே புதிய முயற்சியை எடுத்துள்ளது.தொழில் நுட்பம் மற்றும் அறிவாற்றலை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளோம். இதனைப் பயன்படுத்திய பாதிக்கப்பட்டோருக்கும் செவிலியர்களுக்கும் இடையே சமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 23,452 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று 489 பேர் உள்பட மொத்தம் 4,814 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 723 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர்வதற்கு தற்போது 10 நாட்கள் ஆகின்றன. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வரும் 27-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின்னர், ஊரடங்கு முடித்துக் கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.