This Article is From Apr 30, 2020

திடீரென்று துரத்திய யானை… பைக்கை போட்டுவிட்டு ஓடிய இருவர்… வைரல் வீடியோ!

சீற்றம் கொண்ட அந்த பெரிய யானை, அவர்களை துரத்திக் கொண்டு ஓடி வந்துள்ளது.

திடீரென்று துரத்திய யானை… பைக்கை போட்டுவிட்டு ஓடிய இருவர்… வைரல் வீடியோ!

என்ன செய்வதென்று புரியாமல் இரு சக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு, உயிர் தப்பினால் போதும் என்று பீதியில் ஓட்டம் பிடிக்கின்றனர்

யானைகள் மிகவும் சாந்தமான மிருகங்களாகவே பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், அவை சினங்கொண்டு சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை வைரலாகும் ஒரு வீடியோ மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவரால், 16 நொடிகளே ஓடும் அந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

ஒரு பெரிய யானையும் சில குட்டி யானைகளும் சாலைக்கு அருகில் நடந்து செல்கின்றன. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் வனத் துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளை தூரத்திலேயே நிற்குமாறு பணிக்கின்றனர். அதைக் கேட்டு சாலையில் வந்த கார், வெகு தொலைவிலேயே நின்று விடுகிறது. ஆனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த எச்சரிக்கையை மதிக்காமல் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

இதனால் சீற்றம் கொண்ட அந்த பெரிய யானை, அவர்களை துரத்திக் கொண்டு ஓடி வந்துள்ளது. திடீரென்று யானைக்கு இப்படி மதம் பிடிக்கும் என்று வாகனத்தில் வந்தவர்கள் நினைக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் இரு சக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு, உயிர் தப்பினால் போதும் என்று பீதியில் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோதான் பதிவு செய்யப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது. 
 

வீடியோவைப் பகிர்ந்த அதிகாரி நந்தா, “ஒரு யானை தன் குட்டிகளோடு இருக்கும் போது சாந்தமானவையாக இருக்காது. அதைத்தான் இந்த வீடியோ உணர்த்துகிறது,” என்று பதிவிட்டுள்ளார். 

ட்விட்டர் தளத்தில் வீடியோ பகிரப்பட்டதில் இருந்து பலரும் அதைப் பார்த்து அதிர்ச்சியில் கருத்திட்டு வருகிறார்கள். 

Click for more trending news


.