This Article is From Mar 25, 2020

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்

இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்

அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க - கமல்ஹாசன்

ஹைலைட்ஸ்

  • பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல
  • அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர்
  • இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 11 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக நேற்றிரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, எந்த துயரம் வந்தாலும் அதனை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்பதைத்தான் மக்கள் சுய ஊரடங்கு உணர்த்தியது. நாட்டுக்காகவும், மனிதக் குலத்தின் நன்மைக்காகவும் நாம் சுய ஊரடங்கைக் கடைப்பிடித்தோம்.

கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசங்களும் முடக்கப்பட்டிருக்கும். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த கடுமையான நடவடிக்கை மிக அவசியம். 

இந்த தேசிய ஊரடங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உயிர்கள் எனக்கு முக்கியமானது. எனவே நீங்கள் நாட்டின் எந்தப் பக்கத்திலிருந்தாலும் நடமாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும். இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு உத்தரவால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்வீட்டரில் பதிவில் கூறியதாவது, உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. 

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என்று அவர் கூறியுள்ளார்.

.