This Article is From Mar 03, 2019

தமிழக மீனவர் பிரச்னைக்கு என்ன தீர்வு? – விளக்கம் அளித்த ப.சிதம்பரம்

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. சில நேரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

தமிழக மீனவர் பிரச்னைக்கு என்ன தீர்வு? – விளக்கம் அளித்த ப.சிதம்பரம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார்.

ஹைலைட்ஸ்

  • எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைதாகின்றனர்
  • ஆண்டுக்கணக்கில் தமிழக மீனவர் பிரச்னை நீடித்து வருகிறது
  • இருநாட்டு மீனவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட என்ன வழி என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. சில நேரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

ஆண்டுக்கணக்கில் இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசை மாநில கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம், மீனவர் பிரச்னை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்-

மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு பலமுறை நடவடிக்கை எடுத்துள்ளது. இரு நாட்டு மீனவர்களையும், மீனவ சங்கங்களையும் அழைத்து பல கூட்டங்களை மத்திய அரசு நடத்தியுள்ளது. நேருக்கு நேராக அவர்கள் பேசிவிட்டார்கள். ஆனால் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கடலிலும் ஓர் எல்லை இருக்கிறது. அது கண்ணுக்கு தெரியாத எல்லை. அதற்குள்ளாகத்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் அந்த கட்டுப்பாடு நடைமுறையில் சாத்தியம் இல்லை.

இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி வருகின்றனர். நம்முடைய மீனவர்களும் எல்லை தாண்டி செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் இரு தரப்பிலும் சலசலப்பு, கைகலப்பு ஏற்படுகிறது.

இருநாட்டு மீனவர்களும் பேசி உடன்பாட்டிற்கு வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே இந்த சண்டை, உயிரிழப்புகள் எல்லாம் முடிவுக்கு வரும். மற்ற நாடுகளுக்கும் கடல் எல்லைகள் உள்ளன. அவர்கள் பேசி சுமுகமாக கடல் எல்லை பிரச்னையை முடித்துக் கொள்கின்றனர்.

என்னுடைய கருத்து என்னவென்றால், இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து தந்தது. இந்த பிரச்னையை இரு நாட்டு மீனவர்களும் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் உடன்பாட்டுக்கு வந்துவிட்டால் அதன்படி, இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதுதான் தீர்வு.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

.