தமிழகத்தில் ஏப்.1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்
ஹைலைட்ஸ்
- ஏப்.1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது
- தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கலாம்
தமிழகத்தில் ஏப்.1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு முறை அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் ஒரு ரேசன் கார்டுக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ரேசன் பொருட்களை வாங்கலாம். ஜூன் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே ரேசன் கார்டு திட்டம் சோதனை முறையில், கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் ஏப்.1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக்கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களைப் பெறலாம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 60 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 99 லட்சம் கார்டுகளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேசன் பொருட்கள் வாங்காத கார்டுகளும் பொருட்களை வாங்கும் கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதனால் ரேசன் பொருட்கள் வாங்கும் கார்டுகளின் எண்ணிக்கை மேலும் 4 லட்சத்து 50 ஆயிரம் கார்டுகள் அதிகரித்துள்ளன.