This Article is From May 04, 2019

டெல்லி பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் பளார்!! சரிந்து விழுந்த முதல்வர்!

மக்களவை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பொது வெளியில் அவர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறை விட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி டெல்லியில் திறந்த வாகனத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கன்னத்தில் ஒருவர் அறை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மோதி நகர் அருகே கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். திறந்த ஜீப்பில் கையை அசைத்து சென்று கொண்டிருந்த கெஜ்ரிவால், மக்களிடம் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது, சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் பாய்ந்து வந்து, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விட்டார். இதனால் அதிர்சசி அடைந்த கெஜ்ரிவால், சரிந்து விழுந்தார். இதையடுத்து, அந்த நபரை கீழே தள்ளிவிட்ட தொண்டர்கள், அவருக்கு அடி உதை கொடுத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என்று ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், 'டெல்லி முதல்வர் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பேரணியின்போது, அவரை ஒருவர் தாக்கியுள்ளார். கோழைத்தமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்றவற்றை செய்து எங்களின் வெற்றியை தடுத்து நிறுத்தி விட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.