This Article is From Dec 16, 2018

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே!

கடந்த அக்டோபர் மாதம் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பிரதமராக பதவியேற்றார்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே!

கடந்த அக்டோபர் மாதம் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.

ராஜபக்சே பதவியேற்ற நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவையும் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கேவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 

.