கோயிலில் சுமார் அரை மணிநேரம் இருந்து பூஜை செய்தார் ராகுல்.
Ujjain (MP): மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் உஜ்ஜெய்னியில் அமைந்துள்ள மஹா காளீஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.
பாரம்பரியம் மிக்க அந்த கோயிலுக்கு வேஷ்டி மற்றும் பூஜை உடைகளை அணிந்திருந்த ராகுல் காந்தி கோயிலில் சுமார் 30 நிமிடங்களுக்கு வழிபாடு நடத்தினார். இந்தக் கோயிலுக்கு அவர் வருவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டின்போது ராகுல் காந்தி இந்தக் கோயிலுக்கு வந்திருந்தார். அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் காந்தி, தாயார் சோனியா காந்தி ஆகியோரும் உஜ்ஜெய்னி மஹா காளீஸ்வரர் கோயிலுக்கு வந்திருக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சிப்பொறுப்பில் நீடித்து வருகிறது.