This Article is From Mar 15, 2019

திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

வழக்கில் கைதான சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திருநாவுக்கரசு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

முன்னதாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. நீதிமன்றம் முழுவதும் மகளிர் அமைப்பினர் சூழ்ந்ததால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த போலீசார் அனுமதி கேட்டனர். 

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து திருநாவுக்கரசு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையை அடுத்து அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். 

இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாகவும், இவர்களால், சுமார் 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது. 

இதனிடையே, கடந்த 25ஆம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

.