This Article is From Mar 12, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தையே உலுக்கி வருகிறது. குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன

வழக்கு தொடர்பாக 8 பேர் கைதானபோதும் 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு
  • 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
  • குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி கொடூர பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்த குமார், சதிஷ் ஆகியோர் பயன்படுத்திய செல்போன்களை தமிழக அரசு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளது. இதில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று காலை இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்த வந்தன.

இந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. 

இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்த கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் ''பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை. 

முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது, தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் '' என்று கூறியிருந்தார். 

 

மேலும் படிக்க: ‘அவன் தப்பு பண்ணிருக்கமாட்டான்..!'- ஆவேசப்பட்ட திருநாவுக்கரசின் தாய்
 

.