This Article is From Sep 25, 2018

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் நாரிமன், குவாலிகர், சந்திராசூத், இந்திரா மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது

ஹைலைட்ஸ்

  • 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது
  • தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை இருக்கிறது
  • கிரிமினல் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக சட்டம் வேண்டும், மனுதாரர்கள்
New Delhi:

கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா என்பது குறித்தான வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதை ஒரு வழக்காக எடுத்து விசாரித்து வந்தது நீதிமன்றம். 

இவ்வழக்கு குறித்த முக்கிய தகவல்கள்:

1.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், குவாலிகர், சந்திராசூத், இந்திரா மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தற்போது கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது. அதையே இன்றைய தீர்ப்பிலும் வழி மொழிந்துள்ளது நீதிமன்றம்.

2.மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கும் வரை ஒருவரை குற்றவாளி என்று சொல்ல முடியாது என்று வாதாடியுள்ளார். 

3.அவர் மேலும், ‘வெறுமனே குற்றம் சாட்டப்படுவதால் அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அதேபோல அரசியல் தலைவர்கள் மீது சாதரணமாக வழக்குகள் பதியப்படும். அதையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டுள்ளார். 

4.அதே நேரத்தில் எதிர்தரப்பில், ‘அரசியல்வாதிகள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டால், அந்த வழக்கு விசாரணை நடப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனாலேயே பல குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகின்றனர்’ என்று பதில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. வேணுகோபாலின் மகனான கிருஷ்ணன் வேணுகோபால் தான் எதிர்தரப்பினர் சார்பில் வழக்காடி வருகிறார். அவர், ‘கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கு ஒரு சட்டம் கொண்டு வரலாம். இல்லையென்றால் அரசியல் கட்சிகளே அவர்களுக்கு சீட் கொடுக்காமல் இருக்கும்படி செய்யலாம்’ என்று வாதாடினார். 

5.இந்த வாதத்துக்கு வழக்கறிஞர் கிருஷ்ணனின் தந்தை வேணுகோபால், ‘ஒரு நபரின் தகுதி நீக்கம் குறித்து எப்படி நீதித் துறை முடிவு செய்ய முடியும்?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

6.வேணுகோபாலின் வாதத்துக்கு நீதிமன்றம், ‘எங்களுக்கு சட்டம் இயற்ற உரிமை இல்லை என்பது தெரியும். அதே நேரத்தில் அரசியலில் கிரிமினல்கள் புகாமல் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. 

7.இந்த வழக்கின் இன்னொரு வழக்கறிஞரான தினேஷ் திவேதி, ‘2014 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, 34 சதவிகித மக்கள் பிரதிநிதகள் கிரிமனல் வழக்கு பின்புலம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படாது. நீதிமன்றம் தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

8.நீதிமன்றமோ, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை, கிரிமினல் வழக்கு பின்புலம் உள்ள அரசியல்வாதிகளுக்கு சீட் கொடுக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

9.இது குறித்து நீதிபதி சந்திராசூத், ‘ஒரு அரசியல் கட்சி குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை வாங்கினால் தான் அதற்கு முறையான அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. அதேபோல கிரிமினல் வழக்கு பின்புலம் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் சின்னத்தை முடக்கி வைப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறலாமே’ என்று கூறினார். 

10.அதே நேரத்தில் நீதிபதி இந்திரா மல்கோத்ரா, ‘அரசியல்வாதிகள் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் பதியப்படும். எனவே, ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாற்று கருத்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் உச்ச நீதிமன்றம், 'இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்றம் தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்ப்பு வழக்கியுள்ளது.

 

.