This Article is From Feb 08, 2020

'தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவேற்றும்' - பிரதமர் மோடி பேச்சு!!

இலங்கையின் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று மோடியும் - ராஜபக்சேவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

'தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவேற்றும்' - பிரதமர் மோடி பேச்சு!!

டெல்லியை தவிர்த்து புத்த மத கோயில்களையும் இந்தியாவில் தரிசிக்கவுள்ளார் ராஜபக்சே.

New Delhi:

இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சேயுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மோடி இவ்வாறு தெரிவித்தார். 

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது-

இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறேன். அந்நாட்டில் அரசியலை நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளம் ஆகியவை மேலோங்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அங்கு மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இவை ஏற்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். 

இலங்கையின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. அந்நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். 

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்பான நீதி, சமத்துவம், அமைதி, மரியாதை உள்ளிட்டவற்றை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். இந்த விவகாரத்தை மனிதநேய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும், இரு நாடுகள் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. 

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். இலங்கை நாட்டின் பிரதமர் கடந்த நவம்பர் மாதத்தின்போது ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இந்தியா வந்தார் ராஜபக்சே. 

இந்தியாவில் 5 நாட்கள் தங்கியிருக்கும் அவர், முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்,  வாரணாசி, சாரணாத், புத்த கயா, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். 

இன்று காலை அவருக்கு  குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 2005 முதல் 2015 வரையில் இலங்கையின் அதிபராக ராஜபக்சே பொறுப்பில் இருந்துள்ளார். 

2018-ல் ராஜபக்சே குறைந்த காலம் பிரதமராக இருந்தார். அப்போது, சீனா இலங்கையில் வர்த்தக தளங்களை அமைக்க ராஜபக்சே ஆதரவு அளித்தார். இது இந்தியாவுக்கு பிரச்னையாக பார்க்கப்பட்டது. 

இன்று பிரதமர் மோடி - ராஜபக்சே சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னதாக ராஜபக்சேவுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

.