கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் என்பது மிக நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருவதனால்...
ஹைலைட்ஸ்
- மே 17 ஆம் தேதியுடன் இந்தியாவில் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது
- கடந்த திங்கட்கிழமை முதல் ஊடரங்கில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன
- நாளை முதல் பயணிகள் ரயில்கள் இயங்கும் எனத் தகவல்
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று மதியம் 3 மணி அளவில் கலந்துரையாட உள்ளார். வரும் மே 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அதை எப்படி தளர்த்துவது என்பது குறித்து முதல்வர்களுடன், பிரதமர் கலந்தோலிசிப்பார் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மத்திய அரசு, கொரோனா வைரஸ் பரவலுக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது பகுதி பகுதியாகவே எடுக்கப்படும் என்று முன்னரே தெளிவாக கூறிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் இடங்களான கன்டெயின்மென்ட் மற்றும் ஹாட் ஸ்பாட் மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றே சொல்லப்படுகிறது.
கடந்த 5 வாரங்களாக பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், பல மாநிலங்களும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றன. அதே நேரத்தில் கடந்த திங்கட் கிழமை, ஊரடங்கில் உள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக பல மாநில அரசுகளும், விவசாயம், கட்டுமானப் பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மிக அத்தியாவசியத் தேவைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அதேபோல மிகவும் அதிக வருவாய் கொடுக்கக் கூடிய மதுபானக் கடைகளையும் கடந்த வாரம் பல மாநிலங்களும் திறந்துள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் என்பது மிக நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருவதனால், வைரஸ் தொற்றுப் பரவாமல் இயல்பு நிலைக்குத் திரும்புவது பற்றியே இனி நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது.
இது குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் பல சுற்றுகள் முடிந்துள்ளன. அப்படிப்பட்ட கலந்துரையாடல்களில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்துள்ளனர்.
இன்று முதல்வர்கள் - பிரதமர் கலந்துரையாடலின்போது, புலம் பெய்ர்ந்த தொழிலாளர்களின் விவகாரம் குறித்து அதிகம் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. பல மாநிலங்களும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அதிகம் கவலைப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதால், கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், இதனால் பல மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்துக்குக் கீழ் வரும் என்றும் அஞ்சப்படுகிறது. கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் இடங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இப்படி மண்டலங்கள் பிரிக்கப்படும் முறை குறித்தும் பல மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனவாம். எந்தெந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் மையங்கள் அமைந்துள்ளனவோ, அங்கு மட்டுமே சிவப்பு மண்டலங்கள் என்று சொல்லப்படும் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளதாம்.