This Article is From Jul 06, 2020

எல்லை பிரச்னை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை!

தொடர்ந்து பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா புதிய கட்டிடங்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டது. 

ஒட்டுமொத்தமாக பேச்சுவார்த்தை மூலம் அனைத்து சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை
  • , சீன படைகள் ஒரு கிலோ மீட்டர் வரையில் பின்வாங்கி சென்றதாக தகவல்
  • தற்போது இரு நாட்டு படைகளும் பரஸ்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
New Delhi:

இந்தியா - சீனா இடையே சமீபத்தில் எழுந்திருக்கும் லடாக் பிரச்னை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தொலை பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் முடிவில், சீன படைகள் ஒரு கிலோ மீட்டர் வரையில் பின்வாங்கி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தையின் போது, லடாக்கில் மோதல் எழுவதற்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று இந்தியாவின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை சீனா தரப்பு ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் தற்போது இரு நாட்டு படைகளும் பரஸ்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இன்றைக்கு சீனா சுமார் 1 கிலோ மீட்டர் வரையில் பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் ஏரி அருகே இந்திய வீரர்களை சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் காணப்பட்டது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் உதவியோடு செயல்படும் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, லே-க்கு சென்று படைகளை பார்வையிட்டார். 

தொடர்ந்து பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா புதிய கட்டிடங்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டது. 

ஒட்டுமொத்தமாக பேச்சுவார்த்தை மூலம் அனைத்து சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.