24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
முன்னதாக, நேற்றைய தினம் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தாலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்றின் சாதகபோக்கின் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே வடக்கு வங்கக்கடலில் வருகிற 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தெற்கு தீபகற்ப பகுதியில் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.