This Article is From Nov 04, 2019

சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு: பாஜகவை எச்சரிக்கும் சஞ்சய் ராவத்!!

Maharashtra Election Results: அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.

சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு: பாஜகவை எச்சரிக்கும் சஞ்சய் ராவத்!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பாஜகவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 170 பேர் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க எந்த ஒரு இறுதி கெடுவும் இதுவரை கொடுக்கவில்லை. அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. 

மற்றொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவரை சஞ்சய் ராவத் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, சரத்பவார் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் சஞ்சய் ராவத் கூறம்போது, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 175 ஆக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறும்போது, கூட்டணி தொடர்பாக எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் சிவசேனா நடத்தவில்லை. எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை. மக்கள் எங்களை எதிர்கட்சிகள் வரிசையில் அமரும் படியே கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால், எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் நாங்கள் கவனமுடன் செயல்படுவோம் என்றார். 

மேலும், சிவசேனா 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது எப்படி என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். நாங்கள் எதிர்கட்சிகளாகவே செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளோம் என்றார். 

50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார். 

.