This Article is From Mar 15, 2019

வாக்கு மெஷினுக்கு எதிராக 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

வாக்கு மெஷினை பயன்படுத்தி வாக்கு செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

வாக்கு மெஷினில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

New Delhi:

வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வாக்களிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வாக்கு மெஷினை பயன்படுத்தி வாக்கு செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த 2017-ல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 

இதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு பாஜகவுக்கு வாக்குகள் அதிகம் விழும்படி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. 

இதன் தொடர்ச்சியாக வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 

இதில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், விவிபாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சீட்டு எந்திரத்தை, மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் வைக்கவுள்ளது. 

முன்னதாக வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடிந்தால் செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையம் சவால் விட்டிருந்தது. இதனை எந்தக் கட்சியும் ஏற்று தேர்தல் ஆணையத்தின் சவாலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

.