This Article is From May 06, 2020

மே 7 முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு!

தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

மே 7 முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஊரடங்கால் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன
  • வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி
  • சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடையாது

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது அரசு. தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

மதுபானங்களின் விலை உயர்வு குறித்து டாஸ்மாக் நிறுவனம், “இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது,” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு மே 7 முதல் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்து. எனினும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் கூறியது. மதுக்கடைகளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1. மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதியில்லை.

4. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

5. அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

6. தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

என்று விதிமுறைகளைப் பட்டியலிட்டது தமிழக அரசு. 


 

.