This Article is From Mar 03, 2019

ஃபேஸ்புக்கில் இம்ரான் கானை பாராட்டியதால் முழங்கால் போட வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்!!

வலதுசாரி அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பேராசிரியர் ஒருவரை கட்டாயப்படுத்தி முழங்கால் போட வைத்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இம்ரான் கானை பாராட்டியதால் முழங்கால் போட வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்!!

மத்திய அரசை விமர்சித்தும் பேராசிரியர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

Vijayapura, Karnataka:

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டியதால் கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் முழங்கால் போட வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஆத்திரம் கொண்ட வலது சாரி அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பேராசிரியருக்கு இந்த தண்டனையை கொடுத்துள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரங்களாக புல்வாமா தாக்குதல், விமானப்படையின் பதிலடி, அபிநந்தன் சிறை வைக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட விவகாரங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதில் கடைசியாக அபிநந்தன் விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

அவரது நடவடிக்கைக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அதில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டியும் பதிவுகள் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த வலதுசாரி அமைப்பினர், சம்பந்தப்பட்ட பேராசிரியரை நேரில் சென்று கண்டித்துள்ளனர்.

பின்னர் அவரை வலுக்கட்டாயமாக முழங்கால் போட வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர் மீது காவல் நிலையத்திலும், கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று கல்லூரி திறக்கப்படும்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது. சம்பந்தப்பட்ட கல்லூரி கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலுக்கு சொந்தமானது. இந்த விவகாரம் குறித்து அவரிடம் கருத்து கேட்க முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

.