This Article is From Nov 21, 2018

காங்கிரஸ் - ஒமர் - முப்டி கை கோர்க்க வாய்ப்பு: காஷ்மீர் அரசியலில் பரபர!

காஷ்மீரில் நீண்ட நாள் அரசியல் எதிரிகளாக இருந்து வரும் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹுபூபா முப்டி ஆகியோர் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்

காங்கிரஸ் - ஒமர் - முப்டி கை கோர்க்க வாய்ப்பு: காஷ்மீர் அரசியலில் பரபர!

‘அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மூவரும் எடுக்கும் முயற்சி. இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறாது’ என்று பாஜக-வைச் சேர்ந்த தலைவர் கூறியுள்ளார். 

Srinagar:

ஜம்மூ - காஷ்மீரில் நீண்ட நாள் அரசியல் எதிரிகளாக இருந்து வரும் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹுபூபா முப்டி ஆகியோர் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இருவரது கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ஒமர் அப்துல்லாவின் தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சிக்கும், மெஹுபூபா முப்டியின் பிடிபி கட்சிக்கும் இடையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பாஜக, ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் சில காய் நகர்த்தல்கள் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் புதிய கூட்டணி கூறித்து தகவல் வந்துள்ளது. 

மொத்தம் 87 பேர் இருக்கும் ஜம்மூ - காஷ்மீர் சட்டசபையில், பிடிபி கட்சிக்கு 28 பேர் உள்ளனர். காங்கிரஸுக்கு 12 பேரும், தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சிக்கு 15 பேரும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் மூன்று பேரும் சேர்ந்தால் 44 என்ற பெரும்பான்மைக்கும் மேல் பலம் உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளி வரலாம் என்று தெரிகிறது.

பிடிபி கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், கட்சியிலிருந்து விலகிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், ‘தங்கள் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் மற்றவர்கள் பேரம் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

‘அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மூவரும் எடுக்கும் முயற்சி. இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறாது' என்று பாஜக-வைச் சேர்ந்த தலைவர் கூறியுள்ளார். 

.