This Article is From Feb 25, 2019

சட்டவிரோத கைது நடவடிக்கைகள்! - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

உச்சநீதிமன்ற விதிகளையும், சட்டத்தையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோத கைது நடவடிக்கைகள்! - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கடந்த 22-ம் தேதி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக, மனுதாரர் கைது செய்யப்பட்டதாக, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, 'மாணவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பதை ஆராயாமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாணவரின் கைது அவருக்கு மட்டுமல்லாமல், குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மேலும், சட்டவிரோத கைது என்பது மிக மோசமான தனிநபர் சுதந்திர மீறல். கைது செய்யும் போது உரிய விதிகளை பின்பற்றும்படி, காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், விதிகளை மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இதுபோல சட்டவிரோத கைதுகளை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டவர்களை இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட இந்நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

.