This Article is From Apr 22, 2019

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த (ஏப்.18) தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 29-ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதனிடையே, 4 தொகுதிக்குமான வேட்பாளர்கள் பெயர்களை திமுக ஏற்கனவே அறிவித்ததுள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர்.சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் முக்கியமானதாக மாறியிருக்கும் நிலையில், திமுக அதன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்தது. இதேபோல், அதிமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட 300 பேர் விருப்பமனு பெற்ற நிலையில், போட்டியிட விண்ணப்பித்த அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

.