This Article is From Nov 13, 2019

'இந்தியா, சீனா கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்காவுக்கு ஒதுங்குகின்றன' - ட்ரம்ப் புகார்!

பருவ நிலை மாற்றம், கழிவு மேலாண்மை உள்ளிட்டவை இன்றைக்கு உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளன. இவற்றை சமாளிக்க முடியாமல் வளர்ந்த நாடுகளே திணறி வருகின்றன.

'இந்தியா, சீனா கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்காவுக்கு ஒதுங்குகின்றன' - ட்ரம்ப் புகார்!

பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

New York:

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு எதையும் செய்யவில்லை. இந்த நாடுகளில் வெளியாகும் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுகின்றன. அவை மிதந்து மிதந்து அமெரிக்க நகரங்களுக்கு வந்து விடுகின்றன.

பருவ நிலை மாற்றம் என்பது மிகப்பெரும் சவால். இதனை எதிர்கொள்ள பல வழிகளை கையாண்டு வருகிறோம். இது தொடர்பாக பாரிசில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக இருந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால் ஒரு சில ஆண்டுகளில் நம்முடைய தொழில்களை  மூடிவிட்டு போவதுதான் முடிவாக இருக்கும். 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏராளமான அமெரிக்கர்களின் வேலையை பறித்துள்ளது. சுற்றுச் சூழலை நாசம் செய்பவர்களை  பாதுகாக்கும் கருவியாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2030-ம் ஆண்டு வரைக்கும் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ரஷ்யாவை 1990-ம் ஆண்டுகளுக்கு கொண்டு சென்று விடும். 

ஒப்பந்தப்படி இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நாம் பண உதவி செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் நாமே வளர்ந்து வடும் நாடுதான் என்று நான் கூறுவேன். 

இவ்வாறு ட்ரம்ப் பேசினார். 2015-ல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி  இந்தியா உள்பட 188 நாடுகள் உலக வெப்பமயமாதலை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். 

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதாக கூறி அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எதிர்வரும் 2020 நவம்பர் 4-ம்தேதிக்குள் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக வெளியேறி விடும். 
 

.