This Article is From Apr 06, 2020

ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது

ஹைலைட்ஸ்

  • மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14-ம்தேதி முடிகிறது
  • கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது
  • ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு வெளியாகும் என தகவல்
New Delhi:

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு 12 நாட்கள் கடந்துள்ளன. இந்த நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது ஏப்ரல் 14-ம்தேதியுடன் முடிவுக்கு வந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஊரடங்கு தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அவாஸ்தி, 'கொரோனாவால் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட, நிலைமை சிக்கலுக்கு சென்று விடும். எனவேதான் காலதாமதம் ஆகும் என்று கருதுகிறோம்' என தெரிவித்திருந்தார். 

இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதன்பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், 'கொரோனா வைரஸால் உலகில் ஏற்படும் பாதிப்புகளை நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நாட்டின் நலன் கருதி இந்த விவகாரத்தில், சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் கொரோனா பரவலை திறமை மிக்க அதிகாரிகளைக் கொண்ட குழு கண்காணித்து வருகிறது' என்றார். 

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் 

'தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 50 அதிகரித்து, 621-ஆக உயர்ந்திருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 50 பேரில், 48 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-லிருந்து 6-ஆக அதிகரித்துள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

91,851 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருக்கின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். இவர் திருச்சிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார்' என்று தெரிவித்தார்.

.