This Article is From May 16, 2020

'கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது'- வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து சென்னை ஐகோர்ட் வேதனை

பல நாட்களாக தொழிலாளிகள் நடந்து செல்கின்றனர். இந்த பயணத்தின்போது உயிரிழப்பு, விபத்துகள் நடக்கின்றன. அவர்களின் நிலைமையை பார்க்கும்போது யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. அனைத்து மாநிலங்களும் இந்த விஷயத்தில் மனிதத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

'கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது'- வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து சென்னை ஐகோர்ட் வேதனை

வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே 22-ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Chennai:

நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வற்காக நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் விபத்தில் சிக்குதல், நோய் பாதிப்புக்கு ஆளாகுதல் போன்ற துயரங்களை சந்திக்கின்றன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வெளிமாநில தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளதென்றும், கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் என்ற கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என புகார்கள் எழுந்தன. அவர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிராவுக்கு தமிழர்கள் பிழைப்புத் தேடி செல்கின்றனர். பொது முடக்கம் காரணமாக அவர்களால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. ஊர் திரும்ப வேண்டும் என்றால் ரூ. 3,500 வரை வழங்க வேண்டும் என்று கேட்டு மகாராஷ்டிர அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரையும் சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், ''வெளி மாநில தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபகமாக உள்ளது. அவர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு வர தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். 

பல நாட்களாக தொழிலாளிகள் நடந்து செல்கின்றனர். இந்த பயணத்தின்போது உயிரிழப்பு, விபத்துகள் நடக்கின்றன. அவர்களின் நிலைமையை பார்க்கும்போது யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது. அனைத்து மாநிலங்களும் இந்த விஷயத்தில் மனிதத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.'' என்ற தெரிவித்தனர். 

இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே 22-ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கான ரயில், பஸ் கட்டணத்தை அரசே ஏற்கும். எனவே நடை பயணம் மற்றும் பிற வாகனங்களில் ஏறி சொந்த ஊருக்கு வருவதை வெளி மாநில தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

.