This Article is From May 03, 2020

நோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு: சோதனையை அதிகரியுங்கள் அன்புமணி வலியுறுத்தல்!

குறிப்பாக கடந்த 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு: சோதனையை அதிகரியுங்கள் அன்புமணி வலியுறுத்தல்!

நோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு: சோதனையை அதிகரியுங்கள் அன்புமணி வலியுறுத்தல்!

ஹைலைட்ஸ்

  • நோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு
  • காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • பல நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்று நிகழத் தொடங்கி இருக்கலாம் என அச்சம்

சென்னை கோயம்பேடு சந்தை புதிய கொரோனா நோய்த் தொற்று மையமாக உருவெடுத்திருப்பதாகத் தெரிகிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சென்னை கோயம்பேடு சந்தையில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அங்கு கடந்த சில நாட்களாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள், அங்கு அடிக்கடி சென்று வந்த பிற வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கடந்த சில நாட்களாக கொரோனா ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 40 பேருக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்பேடு சந்தை வழியாக ஏற்பட்ட தொற்றுகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கோயம்பேடு சந்தை மூலமான நோய்த்தொற்று சென்னையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகம் முழுவதும் நீள்கிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றி அரியலூர் மாவட்டத்திலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்ற 19 பேருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு தொழிலாளிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்குத் திரும்பிய இரு தொழிலாளர்களுக்கு நேற்று முன்நாள் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தவிர கோயம்பேடு சந்தையில் பணியாற்றித் திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என கடலூர் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியாகும் எனத் தெரியவில்லை.

இவர்கள் தவிர சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கடந்த 39 நாட்கள் ஊரடங்கு காலத்தில் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும் அதை மதிக்காத மக்கள் தொடர்ந்து அங்கு சென்று வந்ததாகத் தெரிகிறது.

குறிப்பாகக் கடந்த 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்குச் சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கோயம்பேடு சந்தையில் கடந்த பல நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்று நிகழத் தொடங்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்தகைய சூழலில் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடித்து சோதனை செய்து குணப்படுத்தாவிட்டால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவி, நிலைமை மோசமடையக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.