இந்தியாவின் 10-வது பிரதமரான வாஜ்பாய், சிறுநீரக தொற்று மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து, நேற்று மாலை 05.05 மணி அளவில் வாஜ்பாய் இயற்கை எய்தினார்.
இதையடுத்து, ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாஜ்பாயின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, "தேசப்பற்றுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த தலைவர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் இன்று ஒரு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.