This Article is From Nov 28, 2019

கோட்சே குறித்து சர்ச்சை கருத்து: பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம்!

மக்களவையில் பேசிய சாத்வி பிரக்யாவின் கருத்தில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றும் இது போன்ற கருத்துகளை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

பிரக்யாவின் கருத்து நாடாளுமன்றத்தில் கடும் அமலியை ஏற்படுத்தியுள்ளது.

New Delhi:

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பக்தர் என்று பேசிய பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்றைய தினம், SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த விவகாரத்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயுடன் இணைத்து பேசினார். 

மேலும் அவர் பேசுகையில், 'ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்ததால், மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்தார். ஒருவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில்தான் SPG பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக ஏதும் செய்யக் கூடாது' என்றார். 

அப்போது குறுக்கீடு செய்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், 'தேசபக்தரை (கோட்சேவை) நீங்கள் உதாராணமாக குறிப்பிட்டு பேசக் கூடாது' என்று பேசினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அவரை அமைதி காக்குமாறு சக பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 

தொடர்ந்து, பிரக்யா தாகூர் பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது கருத்தை பிரக்யா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். 

இந்நிலையில், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பக்தர் என்று பேசிய பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா,  மக்களவையில் பேசிய சாத்வி பிரக்யாவின் கருத்தில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றும் இது போன்ற கருத்துகளை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் பாஜக தெரிவித்துள்ளார். 

மேலும், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் சாத்வி பிரக்யா அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 
 

.