This Article is From Oct 25, 2018

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் கத்தி குத்து..!

விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் கத்தி குத்து..!

ஜகன் மீது கத்தி குத்திய நபர் குறித்து இதுவரை விபரம் எதுவும் தெரிய வரவில்லை

Vishakhapatnam:

ஆந்திர பிரதேசத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் கட்சியின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அந்த மர்ம நபரின் பெயர் ஸ்ரீநிவாஸ் என்று தெரியவந்துள்ளது.  

விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் ஜகனின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தால் ஜகனுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றபோதும், விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து இருக்கும் மெத்தனம் இந்த சம்பவத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஜகன் மோகன் ரெட்டியுடன், கத்தியால் குத்திய நபர், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தனது கையிலிருந்த கத்தி மூலம் அவர், ஜகனை குத்தியுள்ளார். இதையடுத்து ஜகனுக்கு அருகிலிருந்த போலீஸார், ஸ்ரீநிவாஸை கைது செய்து, அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

போலீஸ் விசாரணையில் ஸ்ரீநிவாஸ், 'ஜகன் ஆட்சி பொறுப்புக்கு வருவதை நான் விரும்பவில்லை' என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஜகன், 'தெலுங்கு தேசம் கட்சி தான் இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் இருக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரின் கேன்டீனில் தான் ஸ்ரீநிவாஸ் வேலை செய்கிறார். இதிலிருந்தே, இது அவர்களின் செயல் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது' என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தரப்பு, 'ஜகன் மோகன் ரெட்டி மீது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு, மத்திய அரசின் கட்டுபாட்டில் வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்' என்று விளக்கம் அளித்துள்ளது. 

 

 

.